நல்ல பால் தரும் நாட்டு மாடுகள்… – காங்கிரேஜ், கிர்…

ரசாயனங்களால் விளைந்த கேடுகளை மக்கள் உணரத் தொடங்கியதால் இயற்கை விளைபொருட்கள், பாரம்பர்ய அரிசி, காய்கறிகள் போன்றவை குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருகிறது. அந்த வகையில், அதிக நோய் எதிர்ப்புச் சக்தியையும், சுவையையும் கொண்ட நாட்டுப் பசுக்களின் பால் குறித்த விழிப்பு உணர்வும் அதிகரித்து வருவதால், அதற்கான தேவையும் அதிகரித்து நல்ல சந்தை வாய்ப்பு உருவாகி இருக்கிறது. ஆனால், நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், தேவையான அளவு உற்பத்தி இல்லை என்பதுதான் உண்மை. நாட்டு மாடு வளர்ப்பவர்கள், இயற்கை இடுபொருட்களை உற்பத்தி செய்வதற்காகத்தான் பெரும்பாலும் வளர்க்கிறார்களே ஒழிய, பாலுக்காக வளர்ப்பதில்லை. உற்பத்திக்கும் தேவைக்குமான இந்த இடைவெளியைச் சரியாகப் புரிந்துகொண்ட விவசாயிகள் பலரும், தற்போது பாலுக்காக நாட்டு மாடுகளை வளர்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், சென்னையைச் சேர்ந்த மார்த்தாண்டன் என்கிற ராஜமார்த்தாண்டன். இவரது பண்ணை காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகே சிறுதாவூர் கிராமத்தில் உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்.வி. சுவாமிநாதனின் பேரன் இவர்.

மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள் கொட்டகைக்குத் திரும்பிக்கொண்டிருந்த பிற்பகல் வேளையில் மார்த்தாண்டனின் பண்ணைக்குச் சென்றோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பேச ஆரம்பித்தார், மார்த்தாண்டன்.

“எனக்குப் பூர்விகம் சிவகங்கை மாவட்டம்னாலும், படிச்சது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். சின்ன வயசிலிருந்தே நாட்டு மாடுகள்னா ரொம்பப் பிரியம். பன்னிரண்டாம் வகுப்புல நான் 93 சதவிகித மார்க் எடுத்தேன். அந்தச் சமயத்துல எங்கப்பா ‘உனக்கு என்ன வேணும்’னு கேட்டாரு. அந்த வயசுல பசங்க பைக் வேணும், செல்போன் வேணும்னுதான் கேப்பாங்க. ஆனா நான், ‘நாட்டு மாடுகள் வேணும்’னு கேட்டேன். அந்தளவுக்கு நாட்டு மாடுகள் மேல ரொம்பப் பிரியம். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடக்குறப்போ அதைப் பார்க்கப் போயிடுவேன். இப்போ, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டங்கள்லயும் தொடர்ந்து கலந்துகிட்டிருக்கேன். அதனாலதான், சிவகங்கை மாவட்டம், பாகனேரி பகுதியில ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்படுற புலிகுளம் மாடுகளையும் நான் தனியா பராமரிச்சுட்டு இருக்கேன்.

பால் உற்பத்திக்காகக் குஜராத் நாட்டுப் பசு மாடுகளையும் இங்கே வளர்த்துட்டு இருக்கேன்” என்ற மார்த்தாண்டன், நறுக்கி வைக்கப்பட்டிருந்த பசுந்தீவனங்களை மாடுகளுக்குக் கொடுத்தவாறே தொடர்ந்தார்.

படித்தது மேலாண்மை… வைத்தது மாட்டுப்பண்ணை!

“பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சுட்டு கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். அதுக்கப்புறம் ஜாம்ஷெட்பூர்ல இருக்கிற எக்ஸ்.எல்.ஆர்.ஐ. மேலாண்மை கல்வி நிறுவனத்துல 2012-ம் வருஷம் எம்.பி.ஏ படிச்சேன். ஆனா, எங்கயும் வேலைக்குப் போகத் தோணல. விவசாயம், நாட்டு மாடு வளர்ப்புனுதான் ஆசை இருந்துச்சு. இதைச் சொன்னப்போ, வீட்டுல ஒரு மாதிரி பார்த்தாலும், என் விருப்பத்துக்குத் தடை போடலை. நண்பர்கள் சிலரும் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்றதுல ஆர்வமா இருந்தாங்க. அவங்களோட பேசி கீரைச் சாகுபடி செஞ்சு எல்லோரோட கீரையையும் சென்னைக்குக் கொண்டு போய் விற்பனை செய்யலாம்னு திட்டம் போட்டோம்.

எனக்கான நிலத்தைத் தேடினப்போ, இந்த 7 ஏக்கர் நிலம் கிடைச்சது. இது, அப்பாவோட நண்பர் நிலம். எனக்கு நாட்டு மாடுகள் குறித்துத் தெரியுங்கிறதால, 2013-ம் வருஷம் கீரைச் சாகுபடியோடு, மாட்டு வளர்ப்பையும் ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல தார்பார்க்கர், சாஹிவால், காங்கிரேஜ்னு கறவைக்குப் பேர் போன வடமாநில மாடுகள வாங்கிட்டு வந்து வளர்த்தேன். இதுல காங்கிரேஜ் இன மாடுகள்தான் எனக்கு ஏத்ததா இருந்துச்சு. அடுத்து கிர் மாடுகளை வாங்கினேன். அதுவும் எனக்கு ‘செட்’ ஆச்சு. இப்போ, 18 காங்கிரேஜ் மாடுகள், 8 கிர் மாடுகள் இருக்கு. இதோடு 12 கன்னுக்குட்டிகள் இருக்கு. ரெண்டு குதிரைகளும் வெச்சிருக்கேன். நேரம் கிடைக்கிறப்போ குதிரை வண்டியில் சவாரி கிளம்பிடுவேன்” என்ற மார்த்தாண்டன் தொடர்ந்தார்.

பராமரிப்புக் குறைவு!

“நாட்டு மாடுகளுக்குப் பராமரிப்பு ரொம்பக் குறைவுதான். ஆனா, கறவைக்குனு வளர்க்கற நாட்டு மாடுகளுக்குக் கொஞ்சம் கூடுதல் கவனம் கொடுக்கணும். எந்தளவுக்குப் பசுந்தீவனமும், அடர்தீவனமும் கொடுக்கிறோமோ அந்தளவுக்கு அதிகமான பாலும், வளமான கன்னுக்குட்டிகளும் கிடைக்கும். ஒவ்வொரு மாட்டுக்கும் பால் கொடுக்கும் திறன் வித்தியாசப்படும். செறிவான தீவனம், அதிகப்படியான பராமரிப்புனு கவனிச்சா காங்கிரேஜ் மாடு ஒரு நாளைக்கு அதிகபட்சமா 15 லிட்டர் வரை பால் கொடுக்கும். கிர் மாட்டுக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமா 18 லிட்டர் வரை பால் கொடுக்குற திறன் உண்டு.

இப்போ எங்கிட்ட இருக்கிற காங்கிரேஜ் மாடு ஒருநாளைக்கு 10 லிட்டர் வரைக்கும், கிர் மாடு 12 லிட்டர் வரைக்கும் பால் கொடுத்திட்டு இருக்கு. இந்த அளவு, மாட்டுக்கு மாடு வித்தியாசப்படும். நான் வாங்கிட்டு வர்ற மாடுகள் சரியா பால் கொடுக்கலைனா அதை மாத்திடுவேன். அப்படி ஒவ்வொரு மாடா மாத்தி… நல்லா பால் கொடுக்கிற மாடுகளை மட்டும்தான் பண்ணையில வெச்சிருக்கேன். அப்படித் தேர்வு செஞ்சு நிப்பாட்டுனதுதான் இந்த 26 மாடுகள்.

தொடர்புக்கு, மார்த்தாண்டன், செல்போன்: 98414 11170.

Source: Pasumai Vikatan