ண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கலாம் என உலகமே அலறிக் கொண்டிருக்கிறது. அந்தளவுக்குத் தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. பருவமழை பொய்த்துப் போனதோடு, நிலத்தடி நீர்மட்டமும் அதள பாதாளத்துக்குப் போய்விட்டது. இத்தனை இன்னல்களுக்கு இடையில்தான் விவசாயம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதனால், இருக்கும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியது, காலத்தின் கட்டாயம். எதிர்காலத்தை மனதில்வைத்து, அதிகத் தண்ணீர் தேவைப்படாத பயிர்களைத் தேர்வுசெய்து சாகுபடி செய்தால் மட்டுமே, விவசாயம் வில்லங்கமில்லாமல் இருக்கும். அந்த வகையில் குறைந்த தண்ணீரில், வறட்சியைத் தாங்கி வளரும் கொய்யா, சமீபகாலமாக விவசாயிகளின் விருப்பத் தேர்வாக இருக்கிறது. கொய்யாவுக்குக் கிடைக்கும் விலை காரணமாக கொய்யா சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு அருகில் இருக்கும் ஆயக்குடி கிராமம், கொய்யா சாகுபடிக்குப் பிரபலமானது. இதைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் விளையும் கொய்யாவுக்குத் தனிச் சிறப்பு இருக்கிறது. தவிர, பிரத்யேக சந்தையும் இருப்பதால், ஆயக்குடி கிராம சுற்றுவட்டாரப் பகுதிகளில், முதன்மைப் பயிராக இருக்கிறது, கொய்யா. இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாகக் கொய்யா சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார், ‘முன்னோடி இயற்கை விவசாயி’ கதிர்வேல்.

திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள ஆயக்குடி சந்தைக்கு எதிரில், பழைய காவல் நிலையத்தை ஒட்டிய சாலையில் சென்றால், இரண்டாவது கிலோமீட்டரில் வருகிறது, டி.கே.என்.புதூர். ஊருக்குள் நுழையும் முன்பாகவே வலது பக்கமாகப் பிரியும் மண் சாலையில் 200 மீட்டர் சென்றால் கதிர்வேலின் கொய்யாத்தோப்பு உள்ளது. அறுவடை முடிந்த நிலையில் கத்திரி வயல், கண்வலிக்கிழங்குக்கான பந்தலில் காய்த்துத் தொங்கும் தக்காளி, பாதையோரத்தில் ஒற்றை வரிசையாய் நின்று வரவேற்கும் தென்னை, தூரத்தில் தெரியும் பழனி மலைக்கோயில், அதிகாலைத் தென்றல் என ஒரு ரம்மியமான சூழலில்… குடும்பத்தோடு கொய்யா செடிகளுக்குப் பஞ்சகவ்யா தெளித்துக் கொண்டிருந்த கதிர்வேலைச் சந்தித்தோம்.

வறட்சியைச் சமாளிக்கும் இயற்கை

“பரம்பரையா விவசாயம் செய்றோம். இந்த இடத்துல இருபது ஏக்கர்ல விவசாயம் பாக்குறேன். பத்து ஏக்கர்ல கொய்யா இருக்கு. ரெண்டு ஏக்கர்ல தக்காளி இருக்கு. ரெண்டு ஏக்கர்ல கத்தரி போட்டிருந்தேன். அது ஓய்ஞ்சுடுச்சு. மூணு ஏக்கர்ல தர்பூசணி நட்டிருக்கேன். அது இப்பத்தான் பூவும் பிஞ்சுமா இருக்கு. மீதி நிலத்தைச் சும்மாதான் போட்டு வெச்சிருக்கேன். இந்த வருஷம் மழைமாரி இல்லாம, ரொம்ப கஷ்டமாகிடுச்சு. இருக்கிற தண்ணியை வெச்சுப் பொழப்பை ஓட்டிகிட்டு இருக்கோம். நான் பத்து ஏக்கர்ல கொய்யா நட்டதால ஓரளவு தாக்குப்பிடிக்க முடிஞ்சது. இதுக்கு அதிகளவு தண்ணி தேவைப்படாது. அதோட நான், முழுக்க முழுக்க இயற்கை முறையில விவசாயம் செய்றதால, இந்த வறட்சியையும் ஓரளவு சமாளிக்க முடியுது’’ என்ற கதிர்வேல், தெளிப்பானை மகனிடம் கொடுத்து விட்டு, நம்மைத் தோட்டத்துக்குள் அழைத்துச் சென்று சுற்றிக்காட்டியபடியே பேசினார்.

குடும்ப ஆள்களே போதும்

“எங்க பகுதியில பெரும்பாலும் கொய்யா சாகுபடிதான். இந்தப் பக்கத்துல இருக்கிற மண் வாகு, சீதோஷ்ண நிலையால கொய்யா நல்ல சுவையா இருக்கும். ஒரு கிலோ கொய்யாவுக்குச் சராசரியா 20 ரூபாய் விலை கிடைச்சிடுது. அதிகமா பராமரிப்பு பாக்கத் தேவையில்லை. வீட்டு ஆளுங்களை வெச்சே பராமரிச்சுடலாம். அதனாலதான், எல்லாரும் அதிகமா கொய்யா நடுறாங்க.

பொதுவா, ‘லக்னோ-49’ங்கிற ரகம்தான் இந்தப் பக்கம் அதிகம். அதுக்கு அடுத்து, பனாரஸ் ரகம் பரவலா இருக்கும். கொய்யாவுக்குக் கேரளாவுலதான் நல்ல மார்க்கெட். அவங்களுக்குப் பழமா வித்தா பிடிக்காது. பச்சைக் காயைத்தான் விரும்பி வாங்குவாங்க. அதுக்கு லக்னோ-49 ரகம்தான் சரியா இருக்கு. பனாரஸ் ரக கொய்யா, பழத்துக்கு நல்லா இருக்கும்.

எங்க தோட்டத்துல லக்னோ 49, பனாரஸ், சிவப்பு கொய்யா மூணும் இருக்கு. நாங்க இயற்கை முறையில விளைய வெச்சாலும், ஆயக்குடி சந்தைக்குத்தான் பெரும்பாலும் காயைக் கொண்டு போறோம். சில இயற்கை விவசாயக் கடைக்காரங்களும் அப்பப்போ ஆர்டர் கொடுக்கிறாங்க. நான், ஆயக்குடி கொய்யா உழவர் உற்பத்தியாளர் சங்கத்திலேயும் உறுப்பினரா இருக்கேன். அது மூலமா, கொய்யாப்பழத்தை அரைச்சு, சாறாக்கி பாட்டில்ல அடைச்சு விற்க ஆரம்பிச்சிருக்கோம்” என்ற கதிர்வேல், மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்லத் தொடங்கினார்.

ஒரு மரத்தில் 50 கிலோ

“பொதுவா கொய்யாவை, செடிக்குச் செடி எட்டு அடி, வரிசைக்கு வரிசை பத்து அடி இடைவெளியில நடவு செய்வாங்க. ஆனா, 10 அடிக்கு 10 அடி இடைவெளி, 12 அடிக்கு 12 அடி இடைவெளினும் நான் நடவு பண்ணிருக்கேன். அதேபோல மூணு வயசுள்ள மரம், அஞ்சு வயசுள்ள மரம், ஏழு வயசுள்ள மரம்னு பல வயசுல மரங்கள் இருக்கு. பத்து ஏக்கர் நிலத்துல மொத்தம் 3 ஆயிரம் மரங்கள் இருக்குது.

சராசரியா ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு 50 கிலோ காய் கிடைக்கும். ஒரு கிலோ கொய்யாவுக்கு 15 ரூபாய்க்குக் குறையாம விலை கிடைக்கும். அதிகபட்சமா 60 ரூபாய் வரைக்கும்கூட விற்பனையாகிருக்கு. எப்படிக் கூட்டிக்கழிச்சுப் பார்த்தாலும் கிலோவுக்கு 20 ரூபாய் கண்டிப்பாகக் கிடைச்சுடும். அந்தக் கணக்குல வெச்சுக்கிட்டாலே ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மூவாயிரம் மரத்துக்கும் மொத்தம் 30 லட்சம் ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். வருஷத்துல, ஒரு மரத்துக்கு 250 ரூபாய் வரை செலவு பண்ண வேண்டியிருக்கும். அந்த வகையில மொத்தம் ஏழரை லட்சம் ரூபாய் செலவைக் கழிச்சா பத்து ஏக்கர் நிலத்துல இருந்து வருஷத்துக்கு 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும். ஒரு ஏக்கருக்குனு பார்த்தா 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் லாபமாக கிடைச்சுடும். இது, குறைஞ்சபட்ச கணக்குதான். இயற்கை அங்காடிகளுக்கு வருஷம் முழுக்கக் கிலோ 50 ரூபாய்னுதான் கொடுத்துட்டு இருக்கேன். அதேபோல, குறிப்பிட்ட அளவு பழங்களை மதிப்புக்கூட்டி கொய்யா பழச்சாறும் விற்பனை செய்றேன். அந்த லாபம் தனி” என்ற கதிர்வேல் நிறைவாக,

“எங்க பகுதியில கொஞ்ச நாளைக்கு முன்ன கொய்யாவுல ஒரு நோய் தாக்குச்சு. அது என்ன நோய்யுன்னே இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியலை. ஒரு வகையான வைரஸ் நோய்னு சொல்றாங்க. மரங்கள் ரெண்டா பொளந்து பட்டுப்போயிடுது. இதுனால, இந்தப் பகுதியில ஏகப்பட்ட மரங்கள் காலியாகிடுச்சு. ஆனா, நான் உள்பட இந்தப் பகுதியில இயற்கை முறையில கொய்யா சாகுபடி செய்றவங்களோட மரங்களுக்கு இந்த நோயால எந்தப் பாதிப்பும் இல்லை. கொய்யாவைப் பொறுத்தவரைக்கும் அதிக வேலை வைக்காத பயிர். ஓரளவு வறட்சியையும் தாக்குப்பிடிச்சு வளரும். என்னைப் பொறுத்தவரைக்கும் காய்கறி பயிர்களைவிட கொய்யா நல்ல லாபம் கொடுக்கக்கூடிய பயிராத்தான் இருக்கு” என்று சொல்லி மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, கதிர்வேல் செல்போன்: 94432 18247. 


ஜூன், ஜூலை மாதங்களில் நடவு…

கொய்யா சாகுபடி குறித்து கதிர்வேல் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே…

வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளிலும் கொய்யா வளரும். மழைக்காலமான ஜுன், ஜுலை ஆகிய மாதங்கள் நடவுக்கு ஏற்றவை. சாகுபடி நிலத்தை நன்றாக உழவு செய்து, வரிசைக்கு வரிசை 10 அடி, செடிக்குச் செடி எட்டு அடி இடைவெளியில் ஓர் கன அடி அளவுக்குக் குழியெடுக்க வேண்டும். இந்த இடைவெளியில் குழியெடுத்தால் ஏக்கருக்கு 545 குழிகள் வரை எடுக்க முடியும். ஒவ்வொரு குழியிலும் தலா இரண்டு கிலோ தொழுவுரம், கால் கிலோ வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து இட்டு, கொய்யாச் செடியை நடவு செய்ய வேண்டும். வேப்பம்பிண்ணாக்கு, வேர் தொடர்பான நோய்களை அண்டவிடாது என்பதால் அதைச் சேர்ப்பது நல்லது.

நடவு செய்ததிலிருந்து மூன்று மாதங்கள் வரை, வேர்ப்பகுதியில் ஈரம் காயாத அளவுக்குப் பாசனம் செய்ய வேண்டும். பிறகு 15 நாள்களுக்கு ஒருமுறை பாசனம் செய்தால் போதுமானது. மரத்தில் காய்கள் இல்லாத சமயங்களில், 20 நாள்களுக்கு ஒருமுறை கூட பாசனம் செய்யலாம். வாய்க்கால் பாசனத்தைவிட சொட்டுநீர்ப் பாசனம்தான் சிறந்தது. மரத்தில் பிஞ்சு, காய்கள் இருக்கும்போது, 15 நாள்களுக்கு ஒருமுறை கட்டாயம் பாசனம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பாசனத்தின்போதும் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை நீரில் கலந்து விட வேண்டும்.

செடிகள் ஒன்றரையடி உயரம் வந்தவுடன் முனையை வெட்டி விட வேண்டும். இப்படிச் செய்தால், செடி இரண்டு மூன்று கிளைகளாகப் பிரியும். காய்கள் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதுபோல, குறிப்பிட்ட அளவு உயரத்துக்கு மேல் செடிகளை உயர விடாமல், ஆண்டுக்கு இரண்டு முறை கவாத்துச் செய்ய வேண்டும். நடவு செய்து ஐந்து மாதங்கள் கழித்துப் பூக்கள் எடுக்கும். அந்தப் பூக்களை உதிர்த்து விட வேண்டும். தொடர்ந்து பூக்களை உதிர்த்து விட்டால்தான் செடியின் தண்டுப்பகுதி தடிக்கும். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை பூக்களை உதிர்த்து வர வேண்டும். பூக்களை உதிர்ப்பதையும் கவாத்தையும் முறையாகச் செய்து வந்தால்தான் மரங்கள் தரமானதாகப் பலமுடன் இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வரும் பூக்களைப் பிஞ்சு பிடிக்க விடலாம்.

நூற்புழுவை விரட்டும் வேப்பங்கொட்டை

கொய்யா மரங்களை அதிகம் தாக்குவது மாவுப்பூச்சிகள்தான். 15 நாள்களுக்கு ஒருமுறை, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து மரங்கள் நனையும் அளவுக்குத் தெளித்து வந்தால், மாவுப்பூச்சிகள் வராது. அப்படியும் மாவுப்பூச்சிகள் தாக்கினால்… ஒன்றரை லிட்டர் பஞ்சகவ்யா, மூன்று லிட்டர் ஜீவாமிர்தம், 500 மில்லி வேப்பெண்ணெய் ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மரங்கள் மீது, முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.

கொய்யாவில் நூற்புழுத் தாக்குதல் அதிகளவில் இருக்கும். ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் செண்டுமல்லி செடிகளை நட்டு வைத்தாலே ஓரளவுக்கு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்திவிடலாம். இயற்கை முறை சாகுபடியில், பெரும்பாலும் நூற்புழுக்கள் தாக்குவதில்லை. அப்படியே நூற்புழுக்கள் தென்பட்டால், ஒவ்வொரு மரத்தின் தூருக்கு அருகிலும் சிறிய குழி எடுத்து… ஒரு கைப்பிடி அளவு நன்கு இடித்த வேப்பங்கொட்டையை வைத்து மூடிவிட வேண்டும். இப்படிச் செய்தால் நூற்புழு கட்டுப்படும். காய்கள் நல்ல பளபளப்பாக, அடர் பச்சை நிறத்தில் இருந்து சற்று வெளுக்கத் தொடங்கியதும் அறுவடை செய்யலாம்.


நான்கு ஆடுகள், ஓர் எருமை!

ருபது ஏக்கர் பண்ணைக்குத் தேவையான இயற்கை உரங்களுக்காக நான்கு தலைச்சேரி ஆடுகள், ஓர் எருமை ஆகியவற்றை வளர்த்து வருகிறார் கதிர்வேல். இதுகுறித்து பேசிய அவர், “ஆரம்பத்துல 30 ஆடுகளுக்கு மேல வெச்சிருந்தேன். மழை பெய்யாததால, ஆடுகளுக்குத் தீவனம் இல்லாமப் போயிடுச்சு. அதனால, ஆடுகளை வித்துட்டேன். ஆட்டு புழுக்கைக்காக நாலு ஆடுகளை மட்டும் வெச்சிருக்கேன். எருமையோட சாணம், பால், தயிர்லதான் பஞ்சகவ்யா தயாரிக்கிறேன். இதோட மூத்திரத்தை தண்ணியில கலந்து அப்பப்ப செடிகளுக்கும் தெளிச்சு விடுவேன். என்னோட உரச்செலவு, பூச்சிக்கொல்லிச் செலவு எல்லாத்தையும் இதுங்களே சரி கட்டிடுதுங்க. அதுபோக வீட்டுத் தேவைக்கும் பால் கிடைச்சிடுது” என்றார், கதிர்வேல்.


கண்வலிக்கிழங்கு பந்தலில் தக்காளி!

கதிர்வேல், தனது தோட்டத்தில் கண்வலிக்கிழங்கு சாகுபடி செய்யும் பந்தலில் தக்காளி சாகுபடி செய்துவருகிறார். அதைப் பற்றிப் பேசிய கதிர்வேல், “தக்காளிக்குக் குச்சி வெச்சுதான் சாகுபடி செய்வாங்க. குச்சியை அடிக்கடி கட்டிவிட்டு பராமரிக்க வேண்டியிருக்கும். அதனாலதான் இந்த மாதிரி, கண்வலிக்கிழங்குக்கு அமைக்கிற பந்தலை அமைச்சிட்டேன். பந்தலுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாச்சு. இதுல தக்காளிச் செடிகள் நல்லபடியா வளருது. பந்தல்ல வளர்க்கிறப்போ, பழம் மண்ல விழுந்து வெடிக்கிறதில்லை. நல்ல சைஸ் கிடைச்சது. இந்த வருஷம் மேல்மழை இல்லாததால, எதிர்பார்த்த மகசூல் கிடைக்கலை. விலையும் கிடைக்கலை. அதனால, தக்காளியில சொல்லிக்கிற மாதிரி லாபம் இல்லை. ஆனா, இந்தப் பந்தல் ரொம்ப நல்ல விஷயம். அடுத்த முறை விலை கிடைச்சா, தக்காளி மூலமா நல்ல லாபம் எடுக்க முடியும்” என்றார்.


கொய்யாப் பழச்சாறு! 

கொய்யாப் பழத்தை மதிப்புக்கூட்டி பழச்சாறு தயார் செய்வது பற்றிப் பேசிய கதிர்வேல், “கொய்யாவில் பச்சைக்காயைத்தான்  சாப்பிட அதிகம் விரும்புறாங்க. அதனால, பழங்கள் அதிகம் விற்பனையாகுறதில்லை. சிவப்புக் கொய்யா சீக்கிரமா பழுத்திடுங்கிறதால, அதை வீணாக்காம அரைச்சு பழச்சாறா மாத்திடுறோம். பழச்சாறுக்கு அழுகிப்போன பழத்தையெல்லாம் உபயோகப்படுத்தறதில்லை. தரமான, கெட்டியான பழங்களைத்தான் சாறு தயாரிக்கப் பயன்படுத்துறோம்.

பழங்களை நல்லாக் கழுவி, மிஷின்ல அரைச்சு பழக்கூழா மாத்துவோம். பத்து கிலோ பழக்கூழ்ல பத்து லிட்டர் தண்ணி ஊத்தி ஊற வைப்போம். சாறு நல்லா ஊறினதும், மேலாகத் தெளிஞ்சு வர்ற தண்ணியை எடுத்து, அதை 75 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில சூடு பண்ணி, கண்டெய்னர்ல அடைச்சு விற்பனைக்கு அனுப்புறோம்.

ஒரு கிலோ பழத்தை அரைச்சா 700 மில்லி பழச்சாறு கிடைக்கும். 700 மில்லி அளவுல பாட்டில்ல அடைச்சு 50 ரூபாய்னு விற்பனை செய்றோம். 250 மில்லி பாட்டிலை 20 ரூபாய்னு கொடுக்குறோம். இதை மூணு மாசம் வரைக்கும் இருப்பு வெச்சு குடிக்கலாம். இப்போ, இயற்கை அங்காடிகள்ல இதுக்கும் ஆர்டர் கிடைக்குது. ஆயக்குடி கொய்யா உழவர் உற்பத்தியாளர் சங்கத்துல நான் உறுப்பினரா இருக்கிறதால, அந்தப் பேர்லயே சந்தைப்படுத்துறேன்” என்றார்.


ஆயக்குடி கொய்யா சந்தை! 

மிழகத்திலேயே கொய்யாவுக்கெனத் தனிச்சந்தை ஆயக்குடியில் செயல்படுகிறது. ஊர் எல்லையில் உள்ள காலியிடத்தில் தினமும் சந்தை கூடுகிறது. அதிகாலை 6 மணி முதல் விவசாயிகள் கொய்யாவை சந்தைக்குக் கொண்டு வருகிறார்கள். இதைக் கொள்முதல் செய்வதற்காகக் கேரளா, தர்மபுரி, சேலம், மதுரை… எனத் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வருகிறார்கள். இந்தச் சந்தையில் கமிஷன் ஏஜென்ட்கள் இல்லை. விவசாயிகளே வியாபாரிகளிடம் நேரடியாக விலை பேசி வாங்கிக் கொள்ளலாம். விவசாயி, விலை கட்டுப்படியானால் விற்பனை செய்வார். சுருக்கமாகச் சொல்வதானால் இது விவசாயிகளே நடத்தும் உழவர் சந்தை. காலை 7 மணிக்கு சூடுபிடிக்கும் சந்தை, 9 மணிக்கெல்லாம் முடிந்து விடுகிறது. மா சீசன் காலங்களில் இந்தச் சந்தைக்கு மாங்காய்களும் வருகின்றன.

Source: Pasumai Vikatan